மியன்மாரிலிருந்து வந்த அகதி படகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் மியன்மார் அகதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் குறித்த 12 பேரும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி முகாமிற்கு தங்கவைக்க அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது.
பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லிம் இனத்தை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பஸ்களில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக