அப்பாவி உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கும் பலஸ்தீன மக்களுக்கு போராட்டத்தில் திரண்டது ஏறாவூர் மக்கள்.
(பிராந்திய செய்தியாளர் உமர் அறபாத் -ஏறாவூர் )
அப்பாவி உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கும் பலஸ்தீன மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் அங்கு அரங்கேறும் இஸ்ரேலிய மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்தும் பலஸ்த்தீன மண்ணின் விடுதலையை வலியுறுத்தியும் ஏறாவூர் மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட உணர்வு பூர்வமான போராட்டத்தில் ஓரணியாக திரண்டது ஏறாவூர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஏற்பாட்டில்
முன்னாள் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் SM.நழீம் தலைமையில் மக்களின் எழுச்சிப் பேரணி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடரந்து ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் ஓட்டுப்பள்ளி மீரா ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து அமைதிப் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டு கோபுர முன்றலில் அப்பாவி பலஸ்த்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை கண்டிப்பதுடன் அதனை அடையாளப்படுத்தும் வகையில் மணிக்கூட்டு கோபுர முன்றலில் கறுப்பு துணியினை கட்டி விடும் நடவடிக்கையும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதனை நாடு பூராக முன்னெடுப்பதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது.
பலஸ்தீன் மக்களது சுதந்திரத்தை உறுதிசெய்வதுடன் இஸ்ரேலின் அரக்கத்தனத்தை கண்டிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்தும் தேசிய ரீதியாக கையெழுத்து சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வும் இன்று ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா கூறுகையில் பலஸ்தீன மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கொடூர தாக்குதலை மேற்கொண்டு அப்பாவி உயிர்களை கொண்று குவிக்கும் இஸ்ரேல் உடன் யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனவும் மௌனித்து இருக்கும் மேற்குலக நாடுகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பலஸ்தீன மண் விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தியோடு இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் வலியை தாம் அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையில் பலஸ்தீன மக்கள் படும் அவலநிலையினை தாம் உணர்வுபூர்வமான முறையில் விளங்கிகொள்ள முடிகிறது எனவும் கூறினார்.





கருத்துரையிடுக