இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்.!!

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்.

நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலகத்தில் இன்று (17) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல வருட காலமாக மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது, சிலர் நகர் பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இவ் இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளதாகவும், முறையான இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக்கோரி “NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாராபட்சங்களை நிறுத்து”, “நியாயமான வருடார்ந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து” “இடமாற்றத்தில் தொழிற்சங்கத்தின் ஒருதலைபட்ச தலையீட்டை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன உட்பட அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து தமக்கு நியாயமான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தை நடாத்துவதற்கு இடமளிக்குமாறும் தங்களுடைய கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவதாகவும், இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அத்துடன் நேற்றைய தினம் (16) கோமரன்டகடவல பிரதேசத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்